Saturday, December 26, 2009

போர்க்களம்

ஆதி காலம் தொட்டே கருப்பர்களுக்கும் சிவப்பர்களுக்கும் இனவெறி பிரச்சனையால் பலமுறைப் போரிட்டுள்ளனர்..

ஆம்...! கருப்பின தலைவனின் மகனும், சிவப்பின தலைவனின் தமக்கையும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இந்த விருப்பத்தை அறிந்த இனவெறிப் பிடித்த சிவிப்பன தலைவன் கருப்பின தலைவனின் மகனை கொலை செய்தான்.


சில காலங்களுக்கு பிறகு,

கி.பி.1919 ஆம் வருடம், கார்த்திகை மாதம்., வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது, ஊடகங்களில் மழை வர வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆதலால் மக்கள் வழமைப்போல் கடைவீதியிலும், சாலைகளிலும் திரிந்துகொண்டிருந்தனர்.

ஆனால் இன்று மழை வரும் என்று முன்பே அறிந்த கருப்பர்களும், சிவப்பர்களும் அடைமழையிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கடைவீதியில் உள்ள ஒரு பெரிய இனிப்பகத்தில் முகாமிட்டனர்.

மழைக்காலம் என்பதால், எதிர் வரும் நாட்களுக்காக உணவுப்பொருள்களை சேமித்துக் கொள்ளும்படி கருப்பர்களின் தலைவனும், சிவப்பர்களின் தலைவனும் அறிக்கையிட்டனர்.

தலைவனின் கட்டளையை ஏற்று, இரு இனத்தவர்களும் தங்களின் குடும்பத்துக்காக உணவுப்பொருள்களை சேமிக்க தொடங்கினர்.

அன்று தான் இனிப்பகத்தில் வகைவகையாக, புதுமாதிரியான இனிப்புகள் விற்பனைக்காக தரையிரக்கப்பட்டிருந்தது. அதே கணத்தில் கடையின் முதலாளி சற்று கண் மூடிய நேரத்தில் கருப்பர்களில் பலரும், சிவப்பர்களில் சிலரும் அந்த இனிப்புகளை களவாட தொடங்கினர். இந்த களவாடலில் இரு இனத்தவர்களுக்கும் சிறுமோதல் ஏற்ப்பட்டது. இந்த மோதலில் சிவப்பின தலைவனின் தமக்கையின் கால் முறிந்து போனது. இந்த சலசலப்பால், கண் திறந்த முதலாளி மோதலை தடுத்து அவர்களை அங்கிருந்து விரட்டினார்.

"களவானி கூட்டங்க....!, இவங்களை எவ்வளவு விரட்டியும், அடித்தும் திருந்தவே மாட்டுராங்க,...." , என கடையின் முதலாளி மனதுக்குள் முனுமுனுத்தார்.

தன் தமக்கையின் கால் முறிந்த சேதி கேட்ட சிவப்பன், கருப்பர்களை அழிக்க போருக்கு ஆயத்தம் ஆகும் படி தன் சகாக்களுக்கு கட்டளையிட்டான்.

கருப்பர்களும் போருக்கு தயாரானார்கள். இந்த முறை எப்படியாவது சிவப்பர்களை பழிதீர்த்து விடவேண்டும் என எண்ணி, தன் மக்களை வேண்டினான் கருப்பன்.

போருக்கான நேரம் தொடங்கியது, அதே இனிப்பகத்தில் போர் மூண்டது.

அவர்களை தாக்குங்கள்...!, என கருப்பர்களின் தலைவனும், சிவப்பர்களின் தலைவனும் கூற மண் பொறி கிளப்பி இரு கூட்டத்தார்களின் ஆவி அனல் பறக்க சண்டையிட்டனர்.

விழாக்காலம் என்பதால் மற்ற மக்களின் கூட்டம் அந்த இனிப்பகத்தில் அலை மோதியது. மக்கள் கூட்டத்தைப் பார்த்த கருப்பர்களும், சிவப்பர்களும் போரை நிருத்தும் படி கூறி அந்த இடத்தை விட்டு தப்பிக்க முற்ப்பட்டனர். ஒரு சிலரை தவிர மற்றவர்கள், அங்கு வந்த மக்களின் காலடி மிதியால் இரு இனத்தவர்களும் துண்டு துண்டாக உயிர் விட்டனர்.

சில மணித்துளிகளுக்கு பின்பு,

இரு கூட்டத்தார்களிடமும் எண்ணில் அடங்கா உயிர் சேதம் ஏற்ப்பட்டது. அந்த போர்க்களபூமி மயானபூமி ஆனது.

மழை வரும் காலம் அறிந்த கருப்பு நிற எறும்புகளும், சிவப்பு நிற எறும்புகளும் மானிடர்கள் வரும் காலத்தை மறந்து இனவெறிக் கொண்டு மண்ணோடு மண்ணாகினர்.

Saturday, December 19, 2009

பயணிகள் கவனத்திற்கு

தினமும் என்னோடு, என் வாழ்க்கையோடு பயணிக்கிறவர்கள் எண்ணற்றோர். அவர்களுள் என்னை மிகவும் பாதித்தவர்கள் இருவர் மட்டுமே. அந்த இருவர்கள் எப்பொழுதும் என்னுடனே இருப்பவர்கள். எனனாலே அவர்கள் தினமும் பிழைப்பை நடத்துகிறார்கள். அவர்களுடைய முன்னேற்றத்தில் நானும் ஒரு காரணியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆம்...! அந்த இருவரைப்ப்ற்றிய கதையை தான், நான் இப்பொழுது உங்களுக்கு சொல்ல போகிறேன்.

"என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே, என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்", என பாடிக்கொண்டவாரே தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார இரயிலான என்னில் பயணிக்கும் ஒரு கண்தெறியாத குருட்டுப் பாட்டுக்காரி, கயல் என்கிற கயல்விழி.



அன்று, திங்கள் கிழமை என்பதால், என்னுடைய வீட்டில் அலுவல் செல்லும் பயணிகளால் மிக நெரிசல். இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களின் கழுத்தையும், நின்றுக்கொண்டிருந்த ஆண்களின் பணப்பையையும் பதம் பார்த்தபடியே, என் மேல் எழுதப்பட்ட வாசகங்களை படித்தான் சொக்கு, அது..,

பயணிகளின் கவனத்திற்கு
******************************************
1.) திருடர்கள் ஜாக்கிரதை
2.) புகைப்பிடிக்காதீர்
3.) தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் ரூபாய்.500 வசூலிக்கப்படும்.

என்னில், தினமும் நெரிசலில் சிக்கி அலுவலகம் செல்லும் மக்களின் மூலமாக தன் வாழ்க்கைசக்கரத்தை ஓட்டும் ஒரு திருடன், சொக்கு என்கிற சொக்கலிங்கம்.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, மக்கள் கூட்டம் இல்லாததால், வாசல் கதவோரமாக உட்கார்ந்திருந்த கயலிடம் தன் வேலையைக் காட்டினான். தன் விரிப்பில் உள்ள சில்லரைகளையும், ஐந்து, பத்து ரூபாய்களை எடுக்க முற்ப்பட்டுக் கையை நீட்டிய சொக்கனை பிடித்தாள், கயல்.

சட்டென்று தன் கையில் உள்ள கத்தியை வைத்து கயலின் கையை கீறினான் தப்பிக்க முயன்றான் சொக்கு. அதற்குள் அங்கு சுற்றியுள்ள மற்ற பிச்சைக்காரர்க்ள் சொக்கனை வலைத்துப் பிடித்தனர்.

"ஏண்டா கூருக்கெட்டவனே, அந்தப் புல்லையே பாட்டுப்பாடி பொழைக்குது அதுக்கிட்ட ஏண்டா உன் வேலையக் காட்டுர.." என்றாள் ஒரு பயணி.

"இப்படி உழைக்கரமக்கள்க் கிட்ட இருந்து, உடம்பு கூசாமா திருடி சாப்புட்டா உன் சாவுக்குக் கூட நாலு பேர் வரமாட்டாங்கடா...",

" இந்த பொழப்புக்கு, நீ பிச்சைஎடுக்கலான்டா படுபாவி ",

"காலனா சம்பாதிச்சாலும் வியர்வை சிந்தி உழைச்சி சாப்படுனுன்டா..."

எனக்கு கண்ணு தெரியிலனாலும் பாட்டுப்பாடி உழைச்சுதான்டா, பிழைப்பு நடத்துறேன்.

"ஆனால் நீ கை, கால், உடம்பு சரியா இருந்தும் கேவலம் அடுத்தவன் உழைப்ப திருடுறியேடா...", என அழுதுகொண்டே சொல்லி மயங்கி கீழே விழுந்தாள் கயல்.

அவளை தாங்கிப் பிடித்த சொக்கு, தன் சட்டையை கழற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்த கயலின் கையை கட்டிவிட்டு, மனம் நொந்து அங்கிருந்து சென்று விட்டான்.

சில நாட்களுக்கு பிறகு,

அதே என்னுடைய வீட்டிலே, கூட்ட நெரிசலில், "சுண்டல்..சுண்டல்...சூடா சுண்டல்....!" என்று கத்திக் கொண்டே சுண்டல் விற்றான் சொக்கு.

"கயலின் பாட்டுக் கேட்டு, சட்டென திரும்பிய சொக்கு", கயலை பார்த்தான்.

"தன் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை கயலின் கையேந்திய விரிப்பில் போட்டான்", சொக்கு.. இது வழமையாக நடந்தது, தான் உழைத்து சம்பாதிக்கும் மொத்த பணத்தில் ஒரு பங்கை கயலுக்கு தினமும் கொடுத்தான். இந்த நிகழ்வு கயலுக்கு தெரியாது.

பண உதவி மட்டும் இல்லாமல், கயலுக்கு கண்ணாக இருந்தான் சொக்கு. இந்த அழகான உறவை விளக்க வார்த்தை இல்லை.

வியாழக் கிழமை காலை 8 மணி, சென்னை மாம்பலத்தை கடந்து நான் தாம்பரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். என் கதவோரமாக கயல் உட்கார்ந்து பாடிக்கொண்டே கையை ஏந்தி கொண்டிருந்தாள்.

அன்று கூட்ட நெரிசல் வழமைக்கு அதிகமாகவே காணப்பட்டது. மூச்சுவிடவே வழியில்லாமல் பயணிகள் தள்ளுமுள்ளாடிக்கொண்டிருந்தனர். அதில் சில பயணிகளின் இடிபாட்டால் கதவோரம் இருந்த கயலை கீழேத் தள்ளினர்.

ஆஆஆஆஆ.....ஆஆ........ என கத்திக்கொண்டே என் காலடி சக்கரத்தில் மாட்டிக்கொண்டு துடிதுடித்து உயிர் நீத்தாள்.

என்னால் தானே இன்று கயல் இறந்து விட்டாள். கயலின் வாழ்க்கையில் அவளுக்கு தெரியாமலேயே ஒரு அழியா இடம் சொக்குவிற்கு உண்டு. அந்த அழகான இடத்தையும், உறவையும் நான் நசுக்கி விட்டேனே...!

அவளை என் காலாலே மிதித்து, நசுக்கி கொன்று விட்டேன். இந்த கொலைக்கு எனக்கு என்ன தண்டனை தரப்போகிறது இந்த சமுதாயம்...?

பி.கு: இந்த சிறுகதையை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.



Tuesday, December 1, 2009

பலசரக்குக்கடை

திறமை என்பது மனிதனை தரம் பார்க்கக்கூடிய கருவி. அந்த கருவியை வைத்தே ஒருவனை அறிவுள்ளவன் மற்றும் அறிவற்றவன் என பிரிக்கப்படுகிறான்.

சில வருடங்களுக்கு முன்பு நான் சென்னை ஈக்காட்டுதாங்கலில் வசித்து வந்தேன். அப்போது, அந்த பகுதி எவரும் அறிந்திடப்படாத, எந்த வகையிலும் சிறப்பற்ற பகுதி. இன்று அந்த பகுதியை சுற்றிலும் மென்பொருள் நிறுவனங்கள், வங்கிகள், நட்சத்திர விடுதிகள், கடை வீதிகள் என ஏகப்பட்ட முன்னேற்றம்.

எங்களுடைய அன்றாட உணவுப்பொருள்கள் தேவைகளுக்காக அருகில் உள்ள அம்பாள் நகர் என்ற இடத்திலுள்ள ஒரு பிரபல பலசரக்குக்கடையில் தான் வாங்குவோம்.



பலசரக்குக்கடையுனுடைய முதலாளி வியாபாரத்தில் கெட்டிக்காரர். ஈக்காட்டுதாங்களை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இந்த கடையையே தேடி வருவார்கள். எல்லோரும் அவரை அண்ணாச்சி என்று தான் அழைப்பார்கள். கடையில் வேலைக்கு இரண்டு பேர் வைத்திருந்தார்.

மாதமுதல் தேதி என்பதால், அந்த மாதத்திற்கு தேவையான மொத்த தேவைகளை அன்றே ஒட்டுமொத்த வாங்குவதற்காக ஒரு தாளில் பொருள்களை எழுதி அண்ணாச்சியிடம் கொடுத்தேன்.

"இன்னிக்கு சாயங்காலத்துக்குல்லார சரக்கை உங்க வீட்டுக்கு, கடைப்பையனை எடுத்திட்டு வரசொல்லிடுறேன்", என்றார் அண்ணாச்சி.

"சரிங்க அண்ணாச்சி", என்று வீட்டிற்க்கு கிளம்பிவிட்டேன்.

இரண்டு நாட்கள் கடந்தது, இன்னும் நான் பலசரக்குகடையில் நான் பதிவு செய்த பொருள்கள் வரவில்லை.

ஏன் வரவில்லை என கேட்ப்பதற்க்காக, கடைவீதிக்கு சென்றேன்.

"என்ன அண்ணாச்சி, பதிவு செய்த பொருள்கள், இரண்டு நாளாகியும் இன்னும் வரவில்லை..?", என்று வினவினேன்

மன்னிச்சுக்கோங்க Sir.....!,
சரக்கை எடுத்துட்டு வந்த பையன் கடைக்கு புதுசு, அதனால சைக்கிள்ள வரும் போது பொருள்களை கீழ போட்டு சேதமாக்கிட்டான்....

டேய் மாரி, இங்க வாடா... என்றார் அண்ணாச்சி

என்ன அண்ணாச்சி....,? என்றான் மாரி

இவன் வந்து ஒரு வாரம் ஆகுது, இன்னும் ஒரு வேலையும் உருப்படி இல்ல....!

இவனுக்கு இந்த மாதம் கூலியை நிப்பாட்டுனாதான் திருந்துவான்..

நேத்து ஒருத்தருக்கு மைதா மாவை கட்டுனா, கோல மாவைக்கட்டி கொடுத்துட்டான்...

"நீங்க போங்கய்யா.., நான் சுடலைய விட்டு பொருள்களை அனுப்பி வைக்குறேன்", என்றார் அண்ணாச்சி.

ஏன் இந்த அண்ணாச்சி, அந்த பையனை இப்படி ஏசுகிறார்...?

பலசரக்குக்கடைக்கு மாரி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது, அண்ணச்சி மற்றும் வேலையின் மேல் உள்ள பதட்டதினாலே, பொருள்களை சேதமாக்கிட்டான் என ஏன் அண்ணாச்சி என்னவில்லை...?

சுடலையும் இதே போல், பொருள்களை சேதமாக்கமாட்டான் என்பதில் என்ன நிச்சயம்...?

மாதக்கூலியை நிப்பாட்டினால், இவனை நம்பி இருக்கும் இவன் குடும்பம் என்ன ஆகும் என ஏன் அண்ணாச்சி யோசிக்கவில்லை...?, என்று எனக்குள் நானாக முனங்கிக்கொண்டு கிளம்பினேன்.

சில மாதங்களுக்கு முன்பு அதே பையன் மாரியை, சென்னை சாலிகிராமத்தில் ஒரு பலசரக்குக்கடையில் பார்த்தேன்.

"டேய் மாரி என்னடா இங்கே..?" என கேட்டேன்.

"இந்த பலசரக்குக்கடைக்கு முதலாளியாக இருக்கிறேன்...!" என்றான் மாரி...

பழைய முதலாளி அவனை வேலையைவிட்டு துரத்தியதாகவும் கூறினான்.

"எப்படி கடை போகிறது...?", என கேட்டேன்

"ரொம்ப நல்லா போகுதுய்யா..., இதே மாதிரி சென்னையில் மூணு இடத்துல கடை நல்லா போகுது...!" என்றான் மாரி

இதே மாரியை, ஒரு காலத்தில் உதவாக்கரை என ஒரு முதலாளி கூறினான், ஆனால் இன்றோ...?

அண்ணாச்சி, இந்த முதலாளி மாரியை தொழிலாளியாக இருக்கும் போது சரியாக
பயன்படுத்தியிருந்தால்......?

ஒரு பலசரக்குக்கடையிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உபயோகமாக இருக்கும். அரிசியும் தேவை, உப்பும் தேவை....! அரிசியை விட உப்புதான் சிறந்தது எனவும், உப்பை விட அரிசி தான் சிறந்தது எனவும் தரம் பிரிக்க முடியாது. அதே போல தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவகையில் திறமையானவர்கள்.இந்த உலகதில் பிறந்த யவருமே முட்டாள்கள் இல்லை....

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு குரு,அவனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏதாவது ஒன்று இருக்கும். ஒவ்வொருவனுக்க்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கும், சிலருக்கு வெளிச்சம் உடனே கிடைக்கும், பலருக்கு சில காலம் கடந்து கிடைக்கும்.

இது பலசரக்குக்கடைக்கு மட்டுமல்ல, அனைத்து துறைக்கும் பொதுவானதே.........!

Saturday, November 21, 2009

நினைவலைகள்

இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி,
                                     யூத்புல் விகடன்
 


இவ்வுலகில் வாழும் மனிதன், பலகோடி மனிதர்களிடமிருந்து பலகோடி அனுபவங்களை சந்தித்திருப்பான், ஆனால் ஒரு சில மனிதர்களே, அனுபவங்களே நினைவில் நிலைக்கொள்கிறது.

ஞாபகம் என்பது நமக்கு நடக்கும் இனிமையான அல்லது கசப்பான அனுபவங்களை திரும்பத்திரும்ப நினைபடுத்தி கொண்டே இருப்பது தான், அந்த நிலையான நினைவுகள் நம் உயிருள்ளவரை அழியாது.




இந்த நினைவலைகள் அறிவியல் பூர்வமாகவும் உண்மையாக இருக்கிறது. மனித இனத்திற்க்கல்லாமல், அனைத்து உயிரினங்களுக்கும் வரக்கூடிய ஒரு செயல். மூளையுடைய ஆழ்த்திரனில் நிலைகொண்டு, அனிச்சையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு நம் நினைவு.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோ ஒன்றை நினைவுப்படுத்தி கொண்டே இருக்கிறது.அந்த இனிமையான நிகழ்வுகள் பலதரப்பட்ட அனுபவங்களையும் நினைவு கூறுகிறது.

உதாரணமாக, பத்து வருடங்களுக்கு முன்பு நாம் கேட்ட பாடல்கள், சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள், பழகிய நண்பர்கள், படித்த புத்தகங்கள், இது போன்ற பல நிகழ்வுகளை திரும்ப நாம் சந்திக்கும் போது அந்த கால கட்ட நினைவுகளை பிரதிபலிக்கிறது. அது ஒரு இனிமையான நிகழ்வாகவும் இருக்கலாம், இல்லை கசப்பான நிகழ்வாகவும் இருக்கலாம். இந்த இரண்டுமே வலியுடன் நம் கண்களில் கண்ணீர் கலந்த ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது.



சமீபத்தில் நான் தனிமையில் இருக்கும்பொழுது, கேட்ட ஒரு பாடல் என் பள்ளிப்பருவ அனுபவங்களை பிரதிபலித்தது, அந்த நினைவு நீண்ட நேரம் தொடர்ந்தது(என் கைப்பேசி மணி அடிக்கும் வரை).

இந்த நினைவுகள் பெரும்பாலும் நாம் சந்தித்த, அனுபவித்த அதே நிகழ்வுகளை திரும்ப சந்திக்க இல்லை அனுபவிக்க நேரிடும்போதோ, தனிமையில் இருக்கும் போதோ, இரவு பொழுதில் இருக்கும் அந்த அமைதியான தருணங்களிலோ புலன்படும்.

அந்த இனிமையான நினைவுகள் திரும்ப வராதா...?, என ஏங்கும் உயிர்கள் பல கோடி.

நினைவுகளிலே மிக அழகான, ஒவ்வொருவனுக்கும் மகிழ்ச்சிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு என்பது, நாம் பெற்ற அனைத்து இனிமையான நினைவுகளை திரும்பபெரும் அந்த நினைவே....!

Saturday, November 14, 2009

கருவறை முதல் கல்லறை வரை




இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி,
                                    யூத்புல் விகடன்



"தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பெதென்று மெய்த்தேடல் தொடங்கியதே..." - வைரமுத்து

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றை தேடி அலைகின்றன. அந்த தேடலிலே அதன் முழு வாழ்க்கையும் ஓடி செல்கிறது........

ஆறறிவு முதல் ஐந்தறிவு வரை மண்ணில் பிறந்ததன் நோக்கம் அறியாமல் எதையோ தேடி சென்று கொண்டே ஒரு நாளில் மடிகிறார்கள்.அந்த தேடலில் உலக விடயங்களை அறிந்து புரிந்து கொண்டு ஓடுகிறோம்.
 
இதே தேடலில் தான் துக்கம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, கோபம், பொறாமை, பாசம், நட்பு, காதல், என்று ஏகப்பட்ட புரிதல்களை அறிந்துகொள்கிறான்......

தேடலைப்பற்றி தேடும் போது Willeam Shakesphere சொன்ன "உலகம் ஒரு நாடக மேடை - அதில் மனிதன் என்னும் நாடகன் ஏழுநிலையில் நடிக்கிறான்" என்பது தான் நினைவிற்கு வருகிறது.



கருவறையிலிருந்து பிறந்த குழந்தை முதலில் தாயின் மடியை தேடுகிறது. அங்கே பாசம் என்னும் அன்பு உணவாக அளிக்கப்படுகிறது. சற்று வளர்ந்த பின் நட்பு மற்றும் காதல் போன்ற உறவுகளை அனுபவித்து வெற்றி, தோல்விகளை புரிந்துகொள்கிறான். அதன் பின் ஒரு வேளை உணவிற்காக ஊரை சுற்றுகிறான். இறுதியில் உலக நடப்புகளை புரிந்து கொண்டு அமைதியை தேடி ஒரு நாளில் மண்ணறையை தேடி மடிகிறான். இந்த தேடல் அனைத்து உயிரினங்களுக்கு பொதுவானதாகவே இருக்கிறது.

ஆம்,

கிழக்கும் மேற்க்கை தேடியும், மேற்கு கிழக்கை தேடியும்,
ஆண் பெண்ணை தேடியும், பெண் ஆணை தேடியும்,
துறவி அமைதியை தேடியும்,
பணக்காரன் நிம்மதியை தேடியும், ஏழை பணத்தை தேடியும்
மகிழ்ச்சி துக்கத்தை தேடியும், துக்கம் மகிழ்ச்சியை தேடியும்....
கருவறை கல்லறையை தேடியும்,

இவ்வாறாக ஏதோ ஒன்று, ஏதோ ஒன்றை தேடி சென்று கொண்டே செல்கிறது (முடிவில்லாமல்).....

வாழ்க்கை ஒரு தேடல், இந்த தேடலில் சில முழுமையடைகிறது, பற்பல முழுமையடையாமல் சமுதாயத்தின் பார்வையில் தோற்றுப்போகிறது......

Tuesday, November 10, 2009

இது உங்கள் சொத்து

இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி,
                             யூத்புல் விகடன்





சாதி மத பேதமற்று எல்லோருடைய காலடியையும் தன் மேல் சுமந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் அனைத்து தர மக்களின் நண்பன் பேருந்து.

மக்கள்த்தொகை அதிகம் உள்ள சென்னையில் புறநகரில் பேருந்தில் செல்வதென்பது மிக சுமையான ஒன்றே, ஏனெனில் சுமார் ஒரு அறுபது பேர் செல்ல கூடிய பேருந்தில் இருநூறு பேர் செல்கின்றனர். இதில் இளவயது ஆண்கள், பெண்கள், பள்ளிக்குழந்தைகள், முதியோர்கள் என எண்ணற்றோர் அந்த கூடத்திலே நசுங்குகின்றனர்....

ஒரு சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்துக்கு அடையார் செல்வதற்காக கிண்டியிலுருந்து பேருந்தில் ஏறினேன். அலுவல் செல்ல நேரம் ஆகிவிட்ட காரணத்தினால் கூட்டமாக உள்ள பேருந்திலேயே ஏறினேன். நடத்துனரிடம் அடையார் ஒன்று என்று பயணசீட்டை கேட்டேன். கிண்டியிலுருந்து அடையார் செல்வதற்கு ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு விலை...!, நான் ஏறிய மஞ்சள் நிற பேருந்தில் ரூபாய் 2.50. ஐந்து ரூபாயை நடத்துனரிடம் கொடுத்தேன், சில்லறையாக தரும்படி கேட்டார், சில்லறை இல்லை என்பதால் மீதம் இரண்டு ரூபாயை வாங்கினேன். மீதி சில்லரையான ஐம்பது பைசாவை இறங்கும் போது வாங்கிக்கும் படி நடத்துனர் சொன்னார்.



அண்ணாப்பல்கலைகழக பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றது. அந்த நிறுத்தத்தில் இறங்கும் போது ஒரு பயணி நடத்துனரிடம், என்னுடைய மீதி ஐம்பத்து பைசா கொடுங்க என்றார்.
 
"சில்லறை இல்லப்பா, ஐம்பத்து பைசா இருந்தா கொடுத்துட்டு, ஒரு ருபாய் வாங்கின்க்கோ...," என்றார் நடத்துனர்.

அதே நிறுத்தத்தில் ஒரு வயதான மூதாட்டி ஏறினாள். அங்கிருந்து பட்டினம்பாக்கம் செல்வதற்காக பயணசீட்டை நடத்துனரிடம் கேட்டாள், அதற்கு நடத்துனர், "ரூபாய் 4.50 கொடு என்றார்."

இடுப்பில் மாறிய சுருக்கு பைய்யை எடுத்து சில்லறையை எண்ணி நடத்துனரிடம் கொடுத்தாள்.

"நால்ரூபா தான் இருக்கு , இன்னும் ஐம்பத்து பைசா கொடுமா...." என்றார் நடத்துனர்(கோபத்துடன்)

"வேற காசு இல்லப்பா..., "என்றாள் அந்த வயதான மூதாட்டி

தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொடு, இல்லைனா எரங்கு..., காலங்காத்தால வந்து கொடச்ச்ள கொடுக்காத...., என்று சற்று கோபத்துடன் கையிளுருந்த விசிலை அடித்து பேருந்தை நிறுத்தினார்...

"ஏம்ப்பா வயசான அந்த அம்மாவ இப்படி திட்டுர..., இந்தா ஐம்பத்து பைசா" என்று அருகிலுருந்த ஒருவர் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் என்னுடைய நிறுத்தம் வந்தது, இறங்கினேன்(மீதமுள்ள ஐம்பது பைசாவை மறந்து).

நிறுத்தத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும்போது நடத்துனரிடம் உள்ள மீதி ஐம்பது பைசா நினைவுக்கு வந்தது.

ஒரு ஐம்பது பைசாவிற்க்காக அந்த கிழவியிடம் சண்டையிட்ட நடத்துனர், என்னுடைய ஐம்பது பைசாவை வைத்து என்ன செய்வார்...?

இன்று என்னைப்போல் எத்தனை பேர் நடத்துனரிடம் ஐம்பது பைசாவை இழந்திருப்பார்கள்...?

மக்கள் ஏமாந்த அந்த பணம் நடத்துனருக்கு போய் சேர்கிறதா...?

அப்படியானால் அந்த நடத்துனர், அந்த கிழவியை திட்டிய அதே தாகாத வார்த்தைக்கு உரியவரா.......?

மக்கள் பயணிக்கும் போது சில்லறை வைத்திருப்பது ஒன்னும் கடமை இல்லை, இருந்தால் நலமே... ஆனால் ஒரு நடத்துனரின் வேலை ஒவ்வொரு பயணியிடமும் போய் பயணசீட்டு கொடுப்பதே(ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை, காலியாக உள்ள பேருந்திலும் மக்கள் தான் நடத்துனரிடம் போய் சீட்டு வாங்க வேண்டிய நிலைமை), குறைந்தது ஒரு இருநூறு பேருக்காவது சில்லறை வைத்திருக்க மாட்டாரா....?

பெரும்பாலும் அரசு வேலை செய்பவர்கள், மக்களிடம் மரியாதையுடன் முறையாக பேசுவதில்லை, முதல் அமைச்சர் முதல் நடத்துனர் வரை அப்படியே.........!

Tuesday, November 3, 2009

பசங்க

டேய் குமாரே, "நாளைக்கு என் ஆளு பொறந்த நாளு, நாளைக்கு என்னுடைய லவ்-அ சொல்லியே ஆகனும்டா " என்றான் கார்த்தி.

வேணாண்டா மவனே வம்பாயுடும்டா, அவ அப்பா வேறு போலீஸ் காரண்டா.....

"பாத்துக்குலாம்டா.......!” என்றான் கார்த்தி....



மறுநாள் சனிக்கிழமை.., வகுப்பறையில்,

என்னடா, இன்னிக்கு உன் லவ்-அ சொல்ல போறேன்ன....இன்னும் சொல்லலியா....? என்றான் குமார்

லவ் லெட்டர்-அ கயல்விழி புக்-ல வசுடேண்டா....

புத்தகத்தை அவள் பயில் இருந்து எடுத்த கயல், லவ் லட்டரை எடுத்து படித்தாள்( லவ் லட்டர் என்று தெரியாமல்....!)

அந்த லட்டரை படிக்கும் போது சடாரென்று, லட்டரை பிடிங்கினான், குரு(கார்த்தியின் எதிரி)....

கயல்விழி மீது பேனா மைய்யை அடித்து கொண்டு கேலி செய்து கொண்டிருந்தான், குரு….

அதைப்பார்த்த கார்த்தி….., குருவை அடித்தான்.....

"இன்னிக்கு சாயங்காலம் இஸ்கூல் முடிஞ்சதும் தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாடா..." என்றான் குரு

"நீயா நானான்னு பாத்துடுலாம்டா........" என்றான் கார்த்தி...

எதுக்குடா எனக்காக அவன் கூட சண்டை போடுற..., ? உன் மனசுல என்ன நினச்சுட்டு இருக்க....? என்றாள் கயல்.......

"அதான் உன்னதான்னு எழுதியே கொடுதுட்டேனே, அப்புறம் என்ன தெரியாத மாதிரி கேட்குற..." என்றான் கார்த்தி

பதில் என்ன சொல்வதென்று தெரியாமல் பயம் கலந்த வெட்கத்துடன், லட்டரை மடித்து அவள் கணக்கு புத்தகத்திலே வைத்தால், கயல்..........

வகுப்பறையில் கணித ஆசிரியர் நுழைந்தார்,

இன்னிக்கு பாக்கபோறது "தனிவட்டி", யாராவது புத்தகம் கொடுங்க, என்றார் ஆசிரியர்...

"சடாரென்று கயலின் புத்தகத்தை புடுங்கி ஆசிரியரிடம் கொடுத்தான்...., குரு"

புத்தகத்தை புரட்டிய ஆசிரியர், லட்டரை பார்த்து படித்தார்....

யாருமா இதை உன் புக்கில் வச்சது....?

"படபடப்புடன் கார்த்தியை பார்த்துக்கொண்டே தெரியல சார் என்றாள்.. /*&^%:/!@ " கயல்.

நம்ம வகுப்புல யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டாங்குலே..., என்றார் ஆசிரியர்....

ஆசிரியர் மாணவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டு மனம் உடைந்தான்.... கார்த்தி

சோகத்துடன் வகுப்பறையை விட்டு வெளியேறிய கார்த்தியை வழிமடக்கினான் குரு.......

சண்டைலாம் வேணாம்டா…, என்று சொல்லுவதற்குள் கார்த்தியின் முகத்தில் கையில் இருந்த பேட்டை வைத்து அடித்தான் குரு.....



சண்டை பெரிதாகி கார்த்தியின் மண்டையை உடைத்தான்...,குரு.........

சுற்றி இருந்த மக்கள் கூடினர்.., எதுக்குடா அடிசுக்குரீங்கோ...!

ஒரு பொண்ணுக்காக அடிச்சுக்குறாங்க, என்றான் குமார்(தடுமாறி).........

ஏண்டா ஏழாம் கிளாஸ்ல என்னடா காதல், யாருடா இதெல்லாம் உங்களுக்கு கத்துகொடுத்தது.....

என்று பசங்களை கண்டித்து பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஊர் மக்கள்.....

சேதி அறிந்து மருத்துவமனைக்கு வந்த குரு மற்றும் கார்த்தியின் பெற்றோர்கள் ,

என்புள்ள குரு சொக்கதங்கம் , கோபக்காரானே தவிர பொண்ணுக்காக சண்டை போடுபவன் இல்லை........

என்புள்ள கார்த்தி காதல், கத்திரிக்க்காயனு செஞ்சிருக்க மாட்டான், அவனுக்கு அதபத்தி என்னனே தெரியாது, படுபாவி குருதான் இந்தவேலையை செய்துருப்பான்....,

பெற்ற தாய் தன் மேல் வைத்துருந்த நம்பிக்கையை கண்டு மனம் நொந்த கார்த்தியின் மேலிருந்த காதல் எனும் பேய் பஞ்சாய் பறந்தது.....

Wednesday, October 28, 2009

கள்ளிக்காட்டு கல்விக்கூடம்

அடர்ந்த மரங்கள், செடி, கொடிகள் கொண்ட வரண்ட காடு, மதுரை பக்கத்தில் உள்ள நரிக்குடி எனும் கிராமம்.

சொக்கன், அழகர், மொக்கை இவர்கள் மூவரும் ஊரின் எல்லையிலுள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.

ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக cycle-ஐ ஓட்டி கொண்டு மொக்கை வீட்டிற்க்கு செல்கிறான், அழகர்.

மொக்கை வாடா பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு, என்றான் அழகர்..
பள்ளிக்கூடத்துக்கு தயாராகி cycle-ன் பின்புறம் உட்கார்ந்தான் மொக்கை..

அங்கிருந்து கிழக்கால உள்ள சொக்கன் வீட்டிற்க்கு சென்று cycle-ஐ நிறுத்தினர்




எம்புட்டு நேரமா நிக்கிறது, என்றான் சொக்கன்

நான் எங்கடா நேரமாக்குன , இந்த மொக்க தாண்டா முகத்துல பவுடர போடுறான், போடுறான் போட்டுக்கிட்டே இருக்காம்டா, என்றான் அழகர்

உனக்கென்ன பொண்ணா பாக்க போறாங்க, பள்ளிக்கூடத்துக்கு தானடா போறோம், என்றான் சொக்கன்.

சரி , உட்காறுடா, நேரமாச்சுனா வாத்தி கத்துவான்டா....

வகுப்பறையில்,

டேய், பசங்களா இன்னிக்கு உங்களுக்கு புஷ்தகம், சட்டத்துணியெல்லாம் வந்துருக்குடா...

எல்லாருக்கும் இருக்கா SIR, என்றான் சொக்கன்...

இல்லடா பைய்யா, இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான்டா...




ஏன் SIR அவைங்களுக்கு கிடையாது...?, என்றான் மொக்கை

அரசாங்கம் அப்படித்தான்டா சொல்லிருக்கு, என்றார் ஆசிரியர்

மதிய உணவு இடைவேளையில்,

டேய் சொக்கா என்னடா இன்னிக்கு சாப்பாடு என கேட்டான் அழகர்,

எங்க ஆத்தா பழைய சோறும், வெங்காயமும் வச்சு கொடுத்ததுடா....

இன்னிக்குமாடா...! என்றான் அழகர்...

தண்ணிகுடிக்க கிணற்றடிக்கு போகலாம் வாங்க, என்றான் சொக்கன்.

கிணத்தில் ஏறி நின்று அழகர், டேய் கிணத்துல்ல வாளீ இருக்கு கைத்த காணோம்டா...

சரி, நான் போய் எடுத்துட்டு வரேன், என்றான் சொக்கன்...

டிஷ்ஷ்.....ஆஆஆஆஆ........டிஷ்ஷ்ஷ்.......ஆஆ,படபட........

கிணற்றில் தவறி விழுந்தான், அழகர்.....

(சட்டென்று பதற்றத்துடன்) டேய் அழகரு என்ன்னாசுடா, என்று கிணற்றை எட்டி பார்த்தான் மொக்கை.....

அழகரு கிணத்துல விழுந்துட்டான், யாராவது வாங்களேன்....... யாராவது வாங்களேன்.., என்றான் மொக்கை...

சுற்றி பள்ளி மாணவர்களை தவிர வேறு எந்த பெரியவர்களும் இல்லை.........

கத்தி..கத்தி..பார்த்து....நண்பனை காப்பாற்ற வேண்டும் என்ற ஆவேசத்தில் கிணற்றில் மொக்கையும் விழுந்தான்...

சிறிது நேரத்திற்கு பிறகு,

கிணற்றில் விழுந்தவர்கள் பிணமாக தரையில்..., அவர்களை சுற்றி கிராம மக்களுடன் மொக்கை மற்றும் அழகரின் பெற்றோர்களும், சொக்கனும்.... 
 
கண்ட சாதி கார பயகளோட சுத்தாத, சேராதன்னு எவ்வளவு சொல்லியும் கேட்காம இப்படி சாய்ந்து கெடக்குரேயெடா.,என்றாள் அழகரின் அம்மா...
 
பக்கத்தில் இருந்த மொக்கையின் அம்மா, எங்க சாதிய பததியாடீ குறைவா பேசுற என்று ஒரு பெரிய கலவரமே நடந்தது பிணற்றின் முன்பு.......
 
என் பிள்ளை, என் பிள்ளை என்று தனித்தனியாக அழுது புலம்பி சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த கணத்தில், என் நண்பர்கள் என்று இருவரையும் கட்டியனைத்து அழுது கொண்டிருந்தான் சொக்கன்...
 
அங்கே சாதி என்னும் தீ மறைந்து, நட்பு என்னும் தீ கொழுந்தாய் பற்றி எறிந்து கொண்டிருந்தது.

Friday, October 23, 2009

சமச்சீர்க்கல்வி - என்னுடைய பார்வையில் (கல்வி-பகுதி-3)

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

(பகுதி-1)
http://www.oodagan.blogspot.com/2009/10/blog-post_16.html
(பகுதி-2)
http://www.oodagan.blogspot.com/2009/10/2_20.html

காமராசர் அறிமுகப்படுத்திய கல்விக்கான சில பொன்னான திட்டங்களை விட்டு மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்…?

இன்று அரசுப்பள்ளியில் இவ்வளவு வசதி இருந்தும், யாவரும் அரசுப்பள்ளியை விட்டு தனியார்ப்பள்ளியை நாடுவது ஏன்...?



ஒரு சில தினக்கூலிகளும், ஒருவேளை சாப்பாடுக்கே வழியில்லாதர்வர்கள் தான் அரசுப்பள்ளியை நாடுகிறார்கள், மற்றவர்கள் அனைவரும் தனியார்ப்பள்ளியை எவ்வளவு செலவு ஆனாலும் தேடிப்போகிறார்கள்.

* முறையான ஆசிரியர்கள் இல்லாததாலா

* ஆங்கிலமொழியின் மேல் உள்ள நாட்டத்தினாலா

* தரமானக்கல்வி கிடைப்பதினாலா

* இடஒதுக்கீடுகள் கிடைக்க பெறாமையாலா

* தனியார் பள்ளிகள் கல்வியை தவிர மற்ற கலைக்களிலும் ஆர்வம் செலுத்துவதினாலா

அரசாங்கம் ஏன் அரசுப்பள்ளியின் மேல் அக்கறை காட்டுவதில்லை.......?

இன்று ஒரு சில தனியார்ப்பள்ளிகளில் பெற்றோர்கள் படித்தால் தான் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தரப்படும் என்ற நிலைமை இருக்கிறது. அப்படியானால் செருப்பு தைப்பவனின் மகன் செருப்பைதான் தைக்கவேண்டுமா...?

இன்று தனியார் பள்ளிகளில், மருத்துவ படிப்புக்கு (MBBS) ஆகும் செலவை விட துவக்க படிப்புக்கே (LKG) அதிக செலவுகள் ஆகின்றது என்றால் மிகையல்ல.


சிறப்பு வகுப்புகள் (TUITION) என்று சொல்லி ஒரு சில பள்ளிகளில் மாணவர்களை கட்டாயப்படுத்தி தனி வகுப்பு நடத்துகிறார்கள். சிறப்பு வகுப்புகளில் இருக்கும் கவனம் ஏன் மற்ற நேரத்தில் இல்லை, ஏனெனில் "பணம் பத்தும் செய்யும்".......

இந்த நிலைமை மாறி தனியார்ப்பள்ளிகளில் உள்ள அத்தனை முன்னேற்றமும், சலுகைகளும் அரசுப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அளிக்க வேண்டும். அப்பொழுது தான் தனியார்ப்பள்ளிகள் செய்யும் பணவேட்டை அடங்கும்.....

என்னுடைய பார்வையில் சமச்சீர் கல்வி என்பது அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் சமமாக கிடைக்கும் கல்வியே....!

Tuesday, October 20, 2009

சாதி, ஒரு சமூக வியாதி - (கல்வி-பகுதி-2)

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

http://www.oodagan.blogspot.com/2009/10/blog-post_16.html

அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இன்று இந்த கல்வி முறை அனைவருக்கும் சமமான முறையில் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூறுவேன்....!

இன்றும் அனைத்து பள்ளியில் மாணவர்களுக்கான வருகை பதிவேட்டில் அவர்களின் பெயரை, அகர வரிசையில் இல்லாமல் சாதி பார்த்து எழுதி எழுதிவருகின்றனர். இல்லையேல் ஒவ்வொரு மாணவனுடைய பெயருக்கு நேராக சாதியையும் சேர்த்து எழுதுகின்றனர்.




சாதிகள் இல்லையடிப்பாப்பா என்று பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு,
சாதி பார்த்து இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள், போன்ற அரசின் இலவச பொருள்கள் கொடுக்கபடுகின்றன.

காமராசர் அறிமுகப்படுத்திய இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள் போன்றவைகள் அனைவரையும் சேர்ந்தடைகின்றனவா...?

காமராசர் அறிமுகப்படுத்திய கல்விக்கான இலவசத்திட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தானா...?

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் தான் இந்த பூமியில் வறுமையில் வாடுகிறார்களா...?, ஏன் மற்ற சாதியினர் இல்லையா.....?

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் , பழங்குடியினர், முற்ப்பட்ட வகுப்பினர்கள் போன்ற எல்லா சாதியிலும் ஒரு வேலை கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்பது அரசுக்கு தெரியாதா.....?




முதலில் பள்ளிகளில் சாதிப்பார்த்து சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து சாதியினரும் ஒரே மாதிரியாக நடத்த பட வேண்டும். இந்த நிலைமை மாறினால் தான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கபெறும்.

ஒரு காலத்தில் ஒரு சில சாதிகள் தரக்குறைவாக நடத்தப்பட்டார்கள், இன்றும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒருவனுடைய தரம் என்பது சாதியின் அடிப்படையில் இருக்கக்கூடாது மாறாக பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் மட்டும் இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு துறை , கல்லூரியில் இட ஒதுக்கீடு என்று அனைத்து துறையிலும் சாதிப்பார்த்து மக்களை வேறுப்படுத்தும் விதம் மாற வேண்டும்..

இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் மக்கள் அரசுப்பள்ளியை விட்டு தனியார்ப்பள்ளியை நாடுவது ஏன் என்று பார்ப்போம்....

Friday, October 16, 2009

கண்ணுடையோர் என்பார் கற்றோர் - (கல்வி-பகுதி-1)

”கண்ணுடையோர் என்பார் கற்றோர் - முகத்திரண்டு
  புண்ணுடையோர் கல்லாதவர்”
                                                                           -வள்ளுவன்

கல்வி பெற்றோரே கண்ணுடையவர்கள், மற்றவர்கள் முகத்திரண்டு புண்ணுடையவர்கள் என்பதே நம் பாட்டன் வள்ளுவன் கருத்து.அவன் எந்த கல்விக்கூடத்தில் படித்து தமிழையும், பிற இதர உலக நுணுக்கங்களையும் கற்றான், அவனுடைய ஆசிரியன் யாராக இருக்ககூடும் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.......?

பண்டைய காலத்தில் வேத நூல்களையே பாடமாக கற்றுக்கொடுக்கப்பட்டு மக்கள் பயின்று வந்தார்கள்.ஒவ்வொரு பிரிவினரும், மதத்தினரும் அவர்களுடைய மார்க்க பாடங்களை ஈபுரு, சமஸ்கிரிதம், அரபி போன்ற வேத மொழிகளின் வாயிலாக பயின்றார்கள். அதுவே அவர்களுக்கு வாழ்க்கை பாடமாக அமைந்தது. அப்பொழுதும் மதம் மற்றும் சாதியின் அடிப்படையிலே வேதங்கள் கற்றுக்கொடுக்க பட்டது.வேதங்கள் படிக்க தகுதியற்றவர் என்று ஒரு பிரிவினர் , உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளப்பட்ட சில பிரிவினரால் ஒதுக்கப்பட்டனர்.

ஒரு சில இடங்களில் இசையும்,மனிதனுக்கு தேவையான தற்காப்புகலைகளும் கலைகளும் ஒரு பாடமாக கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

வேதபாடங்கள் மக்களால் படித்து பரவிக்கொண்டிருந்த காலத்தில், அறிவியல் கண்டுப்பிடிப்பு வெகுவாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அந்த கண்டுப்பிடிப்புகளை பயன்படுத்தியோர் அறிவியல் யுக்திகளையும் கற்க முயன்றனர். இவ்வாறாகவே அறிவியல் மற்றும் கணித படிப்புகள் கல்வி வளர்ச்சி அடைந்தது. இந்த பொதுக்கல்வி உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவியது.

மனிதன் சிறிது சிறிதாக மார்க்க கல்வியிலிருந்து, உலக கல்வியையும் கற்க முற்ப்பட்டான்.

அந்த முன்னேற்றமே உலகத்தின் அனைத்து மூலைகளிலும் உலக பொது கல்விக்கான பாடசாலை வர காரணமாயிற்று. நம் இந்தியாவிலும் இது வெகுவாக வளர்ந்தது.

வேதபாடங்களில் இருந்த பிரிவினை உலக பொதுக்கல்வியை கற்பதிலும் இருந்தது. சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை.

சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர், பெரியார், மற்றும் காமராசர் போன்ற தலைவர்கள் தீவிரமாகப் போராடினார். அதன் பின்னர் கீழ் சாதி, மேல் சாதி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக கல்வி கற்றனர்.

முந்தய காலத்தில் சூத்திரர்கள், உயர் சாதி மக்களால் மிகவும் ஒதுக்கப்பட்டு சீரழிந்தார்கள். அந்த நிலைமையை அம்பேத்கர், பெரியார், மற்றும் காமராசர் போன்ற தலைவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டது.

பண்டைய காலத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருமல்லை நாயக்கர் மகால், தாஜ்மஹால், போன்ற பெரிய கோபுரங்கள், கோயில்களை கட்டியவனுக்கு, மக்களுக்கு தேவையான கல்விக்கூடங்களை நிறுவ வேண்டும் என தோன்றவில்லை. தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களில் தோறும் கல்விக்கூடங்கள் அறிமுக படுத்தியவன் கர்ம வீரன் காமராசனே..........!

கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறிற்று. கல்வி கற்பது எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் கல்வி. இலவசக் கலவி என்றானது.

எங்கும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எல்லோருக்கும் இலவசக்கல்வி - இலவச்ச் சீருடைகள். இலவச மதிய உணவுகள் - தமிழ்நாட்டில் கல்வி நிலை உயர்ந்தது. காலங் காலமாக கல்வி கற்றறியாதவர்கள் எல்லாம் கல்வி கற்றார்கள். காமராசரின் திட்டங்களினால் கல்வி பெருகியது நாட்டில்.


காமராஜர் ஆட்சிக்கால்த்தில்தான் எல்லாச் சிற்றூர்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கூட உயர்நிலைப் பள்ளிகள் உருவாகின.

16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள் படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.

பள்ளிகளில் அந்தக் காலத்தில் பணக்கார்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆடம்பரமான உடைகளில் வந்தார்கள். ஏழை, எளிய பிள்ளைகள் கிழிசல் சட்டைகளைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் வந்தார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப்பார்த்தால், யார் யார் பணக்காரர்கள் வீட்டுப்பிள்ளைகள், யார் யார் ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் என்று எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேறுபாட்டை, வித்தியாசத்தை பூண்டோடு களைந்து எறியவே காமராஜர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுதும் அமுல் படுத்தினார். இந்தத் திட்டத்தினால் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிடம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்டன. அந்தச் சீருடைத்திட்டம் இன்னும் தமிழகத்தில் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் காணலாம்.

இன்று கூட எத்தனையோ, டாக்டர்கள், வழிக்கறிஞர்கள், என்ஜியர்கள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறைப் பெரிய அதிகாரிகள் எல்லாம், ”நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த கல்வித் திட்டங்களால் படித்து, வேலைவாய்ப்புப் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறோம்” - என்று நன்றியுடன் சொல்லிக் கேட்கலாம்.

தமிழகத்தில், பட்டி தொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள், நகரங்கள், பட்டணங்களில் எல்லாம் எல்லோர்க்கும் கல்வியை அளித்த பெருந்தலைவர் காமராஜரைத் தமிழகத்தில், ”கல்விக் கண் திறந்து வைத்தவர்” - என்று சொல்வதிலே தவறேதுமில்லையல்லவா.

இந்தியாவில் அன்று மேற்கு வங்காளமும், கேரளாவும்தான் கலவியில் சிறந்து விளங்கியது. அந்த அளவிற்குத் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தில் கல்வியை எங்கும் பரப்பியவர் காமராசரே என்றால் அது மிகையாகாது.

இதுவரை கல்வி பிறந்த கதையையும் அது மக்களிடையே வளர்ச்சியடைந்த விதத்தையும் பார்த்தோம். இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் இந்த கல்வி முறை அனைவருக்கும் சமமான முறையில் இன்று எல்லோருக்கும் கிடைக்கிறதா என்று பார்ப்போம்....?

Saturday, October 10, 2009

இளந்(இழந்த)தமிழன்

இன்று.........,

அது ஒரு மழைக்காலம்....

வழக்கம் போலல்லாமல் சற்று தாமதமாக என்னோட ஆபிசுக்கு அன்று காலை 11.30 மணிக்கு போனேன்.....

என் சீட்டில் உட்கார்ந்தவுடன், அருகில் உள்ள போன் மணி ஒலித்தது, போனை எடுத்து பேசினேன்...

இன்று Recruitment உள்ளதாகவும் , நான் தான் Interview எடுக்க வேண்டும் எனவும் எனது மேனேஜர் கேட்டுக்கொண்டார்.....

அதன் பெயரில் உடனே Interview அறைக்கு சென்றேன்,

அங்கு மூன்று பேர் Interview க்காக அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தனர்....

Interview அறையில் உட்கார்ந்தவுடன், HR ஐ அழைத்து முதல் Candidatai வரசொல்லுங்கள் என்றேன்.....

முதல் Candidate எனதறைக்கு வந்தான்,

அவனை உட்கார சொன்னேன்,

அவனிடம், "Tell About Yourself" என்றேன்....

அவன் ஆங்கிலத்தில் தட்டுதடுமாறி தன்னைப்பற்றி சொன்னான், சொல்லியும் முடித்தான்...

பிறகு சில Technical Question's கேட்டேன், ஒரு சிலவற்றை தவிர பெரிய பதில்களுக்கு தடுமாறியே பதில் சொல்லிகொண்டிருந்தான்...

அவனுடைய பதிலிலிருந்து நான் ஒன்றை புரிந்துகொண்டேன், அவனுக்கு Answer தெரிந்தும் அவனுக்கு இங்கிலீஷ் தெரியாததால் தடுமாறுகிறான் என்று...

இங்கிலீஷ் பேச அவன் தடுமாறுவதை கண்டு என் மனம் உருகியது..

ஆதலால் அவனுக்கு சில Programs' ஐ எழுத கொடுத்து, எழுத சொன்னேன்....

அவன் எழுதி கொண்டிருந்த அந்த இடைப்பட்ட நேரத்தில்,

நான் காலத்தை சற்று பின்னோக்கி எனக்குள் நானாக மூழ்கினேன்...

சில வருடங்களுக்கு முன்,

அன்று.........,




என் பெயர் தமிழ்செல்வன்....

நான் மதுரையில் மேலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவன்...

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் தமிழ்வழிக்கல்வியில் தான் படித்தேன்..

எனக்கொரு ஆசை, இந்தியாவோட Bilgates ஆகனும்னு....

நான் +2 - ல மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தேன்...

அப்போ எனக்கு கிடைச்ச Doctor படிப்ப விட்டுட்டு, எனக்கு பிடிச்ச Computer படிப்ப, பாளையம்கோட்டை AnnaUniversity - ல Computer Engineering படிச்சேன்........

நான் தமிழ் மீடியத்துல படிச்சதால ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சுதான் 89% எடுத்து கல்லூரி வாழ்க்கையை முடித்தேன்....

படித்து முடித்து வேலைதேடி இந்த சிங்கார சென்னையில் உள்ள திருவல்லிகேனியில் என் நண்பனின் மூலமாக ஒரு Mansion இல் தங்கினேன்...

Interview Attend பண்ணுவதற்காக ஒரு நாள் காலை ரெடி ஆகினேன், Interview போகும் போகும் போது ஷூ போட்டுப்போக வேண்டும் என என்பன் கூறினான், ஷூ என்னிடம் இல்லாததால் அவனிடம் வாங்கி அணிந்து கொண்டு அவசரமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு MNC Company க்கு சென்றேன்.

எனக்கு முன்பாக ஏழு பேர் Interview அறையில் காத்திருந்தனர்...

எனது விழிகள் இரண்டும் அந்த Company-இன் அழகை ரசித்து கொண்டிருந்தது ...

எனக்குள் ஒரு சின்ன பயம் கலந்த படப்படப்பும் இருந்தது....

அங்கு வந்திருந்தவர்கள் நுனி நாக்கில் சரளமாக இங்கிலீஷ் பேசிக்கொண்டிருந்தனர்...

இந்த Company-இல் எப்படியும் வேலைக்கிடைத்துவிடும் என்ற கனவோடு, எனக்குள் பல ஆசைகளும் லட்சியங்களும் ஓடிக்கொண்டிருந்தது.....

HR வந்து என்னை Interview அறையினுள் அழைத்து சென்றார்....

அங்கே எனக்கு கேள்விகள் சரமாறியாக கேட்கககப்பட்டது, அனைத்திற்கும் பதில் தெரிந்தும் இங்கிலீஷ் தெரியாததால் என்னால் சொல்லமுடியவில்லை...

பெருத்த சோகத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்தேன்....

இந்த இழப்பு, சோகம் எனக்கும் மட்டும் ஏற்ப்பட்டது அல்ல, இந்த தமிழ்நாட்டில் உள்ள பல இளந்தமிழர்களுக்கு ஏற்ப்பட்ட பேரிழப்பு ...

இந்த மாதிரி எத்தனை பேர் தகுதி இருந்தும் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால் தோத்துப்போகிருப்பார்கள்...

இந்த மாதிரி எத்தனை தகுதியுள்ள Bilgatesஐ இந்தியா இழந்திருக்கும்...
 
இன்று.........,

"முடிச்சிட்டேன் SIR",  என்று அந்த பையன் என்னை அழைத்தான்...

நானும் என் கனவில் இருந்து மீண்டு அந்த பையன் எழுதிய தாளை வாங்கி பார்த்தேன்...



ஒவ்வொன்றுக்கும் பதில் மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருந்தான்....

அவனை பாராட்டி, வேலைக்கு தேர்வு செய்துவிட்டேன்....!

இது என் நண்பனின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதை வடிவத்தில் எழுதியுள்ளேன்

Wednesday, October 7, 2009

இந்திய மொழிகள் அழிவை நோக்கி....!(மொழி - பகுதி - 3)

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

இதுவரை நாம் மொழி பிறந்த வரலாற்றையும், அது உலகலவில் பரவி புது மொழியாக உருவெடுத்த கதையையும் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியை இங்கே விவாதிப்போம்.

இன்று எமது தாயகத்தில் அனைத்து தர மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட மொழி ஆங்கிலம், ஆதலாலே அனைவரும் தாய்மொழிக்கல்வியை விட்டு அந்நிய மொழியான ஆங்கிலவழிக்கல்வியை தேடி போகிறார்கள்.




பணக்காரன் முதல் ஏழை வரை அந்நிய மொழிவழிக்கல்வியை தேடி போகிறார்கள். ஒரு சில தினக்கூலிகளும், ஒருவேளை சாப்பாடுக்கே வழியில்லாதர்வர்கள் தான் தாய் மொழிவழிக்கல்வியை நாடுகிறார்கள். ஏனெனில் அந்த தாய் மொழிவழிக்கல்வி தான் அரசின் கட்டுப்பாட்டில் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இன்று தாய்மொழியில் பேசுவதை அவமானமாக மற்றும் இழிவாக கருதுகிறார்கள் நம்மவர்கள். ஆங்கில மொழியில் பேசுவதையே நாகரிகமாக கருதுகிறார்கள்.

இன்று ஒரு சிலர் வீட்டிலும் ஆங்கிலத்திலே பேசுகிறார்கள், நாளை அவர்களுடைய சந்ததியினரும் இந்த ஆங்கிலத்தையே பேசுவார்கள்.

அடுத்த நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆங்கில மொழி தான் பேசப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

பல நூறு மொழிகள் கொண்ட இந்த நாட்டில் மற்றும் மிக சில தொன்மையான மொழிகள் பேசப்பட்டு வந்த இந்த இந்தியாவில் வரும்காலத்தில் ஒரே மொழியாம் ஆங்கிலம் தான் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இந்தியா மொழிகள அழிவை நோக்கிபோகிறது. ஆம்....!

எமது தாய் மொழி தமிழும் அழிவையே தேடி போகிறது, தமிழர்களையே அழிக்கும் போது தமிழ் மொழியை மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா....?

"தமிழ் இனி மெல்லச் சாகும்" தமிழ்ப் புலவன் பாரதி கூறியது,
"எம் தாயக மொழிகளும் இனி மெல்லச் சாகும்" உங்களில் ஒருவன் ஊடகன் கூறுவது....!

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு இந்தியா USI(United States Of India) ஆக மாறலாம், அப்போது அனைத்து மக்களும் ஆங்கிலம் பேசுபவர்களாக இருக்கலாம்.....

Saturday, October 3, 2009

ஆங்கிலம் - இந்தியாவில் ஊடுருவல்.....! -- ( மொழி - பகுதி - 2 )

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

பெரும் வளத்தை கொண்ட நாடு நம் இந்தியா. அந்த காரணத்தினாலே முதன் முதலில் போர்சுக்கிசியார்கள் இந்தியாவினுள் நுழைந்தார்கள். மார்க்கொபோலாவின் கூற்றின் பெயரில் வாஸ்கோடகாமா இந்தியாவினுள் கடல் வழியாக வந்தடைந்தார். இங்குள்ள செல்வ வளத்தை நோட்டம் செய்துவிட்டு தனது சகாக்களையும் அழைத்து வணிகம் செய்தார்.

இதே போல் டெனியர்கள், மங்கோலியர்கள், முகலாயர்கள் மற்றும் டச்சுகாரர்கள் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். இதனால் இந்தியாவினுள் அவர்களுடைய மொழிகள் ஆங்காங்கே பரவின. இவர்களுக்குள் கோஸ்டி மோதலில் காரணமாக இவர்கள் எவரும் நிலையாக தங்கவில்லை.

 இவர்களுக்கு பின் வந்த பிரேன்சுகாரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பல ஆண்டு காலம் நிலையாக இருந்து அவர்களுக்கு தேவையான வளத்தை பெற்று கொண்டு செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள். இதனால் அவர்களுடைய மொழிகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் சரளமாக இந்தியாவினுள் நுழைந்தது.

ஆங்கிலேயர்கள் கோல்கத்தா, மும்பை, சென்னை, ஆகிய 3 மாநிலப்பகுதிகளில்தான் நேரடியாக அட்சி செய்தார்கள். இதன் காரணமாக 300 ஆன்டுகளாகவே ஆங்கில மொழியின் தாக்கம் இந்த மூன்று மாநிலங்களிலும் விரைந்து வளர்ந்தது.மற்ற வட மாநிலங்கள் ஆங்கில வாடையே இல்லாமல் சித்றிக்கிடந்தன. இதன் காரணமாகவே தொழில்துறையும் வடக்கே வளரவில்லை. ஹிந்தி மொழியை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமையும் ஆங்கிலேயரையே சாரும்.

உருது மொழி ஏற்கனவே முகலாயர் ஆட்சியில் ஆட்சி மொழியாக இருந்தது. வடக்கே, பேசும் ஹிந்தி, மற்றும் உருது மொழிக்ளைச் சேர்த்து ஹிந்துச்தானி என்று ராணுவ்த்தின் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினார்கள். உருது மொழி தோன்றியது அரபி, ஹிந்தி, பெர்சிய மொழிகளின் கலப்பு. அக்பர்காலத்தில் உருவாக்கப் பெற்றது.



எம் தாய் மொழி தமிழ் பேசி திராவிட நாடு என்றிருந்த எமது தமிழகத்தை கூறுப்போட்டு கன்னட, ஆந்திர மற்றும் கேரளாவாக ஆக்கினார்கள். இங்கே தமிழ் மொழி மூன்று மொழிகளை உருவாக்கியது. இதனாலே இன்று காவேரி, முல்லை பெரியார் அணை, கிருஷ்ணா நீர் போன்ற பிரச்சினைகள் வளர்ந்தது.

நமது தேசத்தில் அதிகபட்ச மக்களால் பேசப்பட்டு வரும் மொழி ஹிந்தி தான்.நம் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினவங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு எம்.பி ஆவும் மந்திரியாவும் இருக்காங்க.ஹிந்தி எதிர்ப்பைக் கொண்டே ஆட்சியைப் பிடித்த அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாரிசுகளை, வாரிசுகளின் வாரிசுகளை பல மொழிகள் கற்க வைத்து புளங்காகிதம் அடைந்துள்ளனர். கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் தமிழ்! தமிழ்! என்று சொல்லி கொண்டு, அவரது குடும்பம் மட்டும் எல்லா மொழிகளிலும் படிப்பார்கள்.

இவர்களது கண்ணோட்டத்தில் மக்கள் எல்லோரும் மடையர்கள். நாங்கள் சொன்னதை என்றுமே செய்யமாட்டோம் என்ற நிஜத்தை மக்களுக்கு பல நிகழ்வுகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளனர். பாவம், இன்னும் பல தொண்டர்கள் இவர்களுக்காக தீக்குளிக்கத் தயாராக இருக்கும் நிலை உள்ளவரை இவர்கள் காட்டில் மழை தான். யாரை நொந்து என்ன பயன்? எல்லாம் ஓட்டுப் போட்ட மக்களைச் சொல்ல வேண்டும்.

தமிழை அதிக நேசித்த அரசியல் கோடீஸ்வரர்களுக்கு ஏன் எமது ஈழ தமிழர்கள் மீது அக்கரை இல்லை....?

ஆங்கிலத்தை இரண்டாவது பாட மொழியாக கற்க ஏற்று கொண்ட அரசு ஏன் நமது தேச மொழியான ஹிந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை....?
 
அப்படி இரண்டாவது பாட மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கிலமும் சரியாக பள்ளிகளில் கற்று தரப்படுகிறதா என்றால் இல்லை.
 
இதில் சமசீர்க்கல்வி வேறு வரப்போகிறதாம்( ஒரு மயிரும் பன்னமாடானுங்க ).........!

தாய் மொழி வழியில் படித்த ஒவ்வொருவனும், தாய் மொழியை தவிர ஆங்கிலத்தை சரியாக படிக்கவில்லை(முறையான ஆசிரியர் இல்லாத காரணத்தால் ).

ஹிந்தி மொழியை எதிர்க்க தெரிந்தவர்களுக்கு , ஏன் ஆங்கில மொழியை எதிர்க்க தெரியவில்லை...?


ஆங்கிலத்தை பெருமைக்காக நம் மக்கள் அங்கீகரிக்கிறார்கள் ஏன் தமிழ், ஹிந்தியை வெறுக்கிறார்கள்.ஜேர்மன், பிரான்ஸ், ரஷ்ய போன்ற வளர்ந்த நாடுகள் அவர்கள் நாட்டு மொழிக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இன்று ஆங்கிலம் தான் நம்மவர்களுக்கு பொது மொழியாக வந்துகொண்டிருக்கிறது. இதற்க்கு காரணம் என்று பார்த்தால் வணிகம் மற்றும் கணினி போன்ற அனைத்து துறையிலும் முதன்மையாக உள்ளார்கள். இதுவே அம்மொழி உலகளவிலும் , நமது தேசத்திலும் பரவியதற்கு காரணம்.

நாம் ஆங்கிலேயருக்கு முதலில் அடிமை, இப்போது ஆங்கிலத்துக்கு அடிமையா?

ஒரு அந்நிய மொழிக்குத் தரப்பட்ட முக்கியத்துவம், நம் நாட்டின் மொழிக்குக் கொடுக்கப் படாதது ஏன் என்று என்றாவது யோசித்ததுண்டா?
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியை பொறுத்துதான் , அந்த நாட்டிலுள்ள மொழிகளும் மற்ற நாட்டினர்க்கு பரவும்.

இந்தியர்கள் கண்டுபிடித்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று சொல்லும்படி எதுவும் மற்ற நாட்டிடையே பரவாவதே இதற்க்கு காரணம்.

மற்ற நாடுகளில் மொழியே இல்லாத காலத்தில், இங்கே பெரும் புலவர்ககள் இருந்துள்ளனர். அந்த முன்னேற்றம் ஏன் இன்று இல்லை....?

கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த மொழி எமது தமிழ் மொழி. பின்பு ஏன் ஒரு கண்டுபிடிப்பும் தமிழில் இல்லை..? மற்ற மாநிலத்தவனை விட, மற்ற நாட்டினரை விட அதி புத்திசாலி நம் தமிழர்கள் தான் என்றால் மிகையல்ல. ஏனெனில் மற்றவன் கண்டெடுத்த ஒன்றை மிக அழகாக கற்றுகொல்பவன் அவனே...! ஆதலால் தான் நம்மவர்களை இன்றளவும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, அமெரிக்கர்களை, சப்பானியர்கள் போன்றவர்களை விட அதிக மக்கள் தொகை கொண்டது. பின்பு ஏன் இங்கு பில்கேட்ஸ், எடிசன் போன்றவர்கள் இல்லை.

நம்மவர்கள் இருப்பதை வைத்து எப்படி முண்டியடித்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதிலே குறிக்கோளாக இருக்கிறார்கள்.

நான் ஆங்கிலத்தையும் , ஹிந்தியையும் எதிர்ப்பவனள்ள, மாறாக மிக பழமைமிக்க எம் தாய் மொழி ஏன் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என தினம் தினம் குமுருபவன்...!

ஹிந்தியை எதிர்க்க நான் கருணாநிதியும் அல்ல, ஆங்கிலத்தை எதிர்க்க ராமதாசும் அல்ல, நான் ஒரு ஊடகன்( உங்களில் ஒருவனாக அந்நிய மொழியால் பாதிக்கப்பட்டவன், நடப்பதை இந்த ஊடகத்தின் வழியாக சொல்லும் ஊடகன்).

நான் கூறியது அனைத்தும் உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. என் கூற்றை ஏற்று கொண்டால், இதை ஒரு கட்டுரையாக படிக்காமல் கருத்தாக ஏற்று கொண்டு, அல்லது படித்துவிட்டு அப்படியே விட்டுவிடாமல், சிந்தித்து, ஆராய்ந்து பற்பல சாதனைகளை புரிய வேண்டும்.

Thursday, October 1, 2009

மொழி -- தோற்றம் : ???? , மறைவு : ???? -- (பகுதி - 1)

மொழி என்பது ஒரு போராட்டக்கருவி அது காலத்திற்குத் தகுந்தாற்போல் மாறி வர வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.

இதுவரை மொழி தோன்றிய காலத்தையும் , மறையும் காலத்தையும் யாராலும் கணிக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய அறிவியல் யுகங்கள் இருந்தும் மனிதன், மொழி தோன்றிய காலத்தை அறியமுடியவில்லை.

உயிரினங்களின் மிக அருமையான உறுப்புகளாக கருதப்படுவது வாய் மற்றும் காது. ஏனெனில் அவை தான் ஒரு விடயத்தை வெளிக்காட்டுகிறது.உலகில் வாழும் அனைத்து வகையான உயிரினங்களும் தங்களுக்கு தெரிந்த மொழியின் வாயிலாக கருத்துக்களை பரிமாரிகொள்கின்றன.




எறும்பில் இருந்து மனிதன் வரை இவ்வாறு ஒரு வகையான மொழியின் மூலமாக தான் பேசிகொல்கிறார்கள். இவற்றுள் ஆறறிவு கொண்ட மனிதனே மொழியை அறிந்து ஆராய்ந்து,சிந்தித்து தனது மூலையில் ஒரு கோர்வையாக அடுக்கி பேசுகிறான். மனிதனுக்கும் மிருங்கங்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்யாசம் இதுதான் என்றால் மிகையல்ல.


உலகில் தோன்றிய முதல் மொழி எதுவென்று இதுவரை அதிகாரபூர்வமாக எதிலும் அறிவிக்க படவில்லை. அப்படியிருக்க ஆதாமும் ஏவாளும் சைகை மொழியாலே பேசி மொழியை வளர்த்திருக்க வேண்டும். ஆதாமும், அவனுடைய சந்ததிகளே மொழியை உருவாகியிருக்ககூடும். அது எந்த மொழியாக உருவெடுத்திருக்கலாம், ஆங்கிலமா..? ஹிந்தியா..?,
இல்லை எம் தாய் மொழி தமிழா...?.

இன்று உலக அளவில் மிக அதிகமாக பேசப்படும் மொழி சீனர்களின் மொழியே. ஏனெனில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு அதுதான். அதற்கடுத்து ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிய மொழிகள், அரபி, வங்காள மொழி இருக்கிறது...

எமது பாரத நாட்டில் ஹிந்தியே முதன்மையாக திகழ்கிறது. அதற்கடுதார்ப்போல் வங்காளம், தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் உள்ளது.

இன்று அதிக அளவில் பரவி வரும் மொழிகள் இந்தோ-ஐரோப்பா மொழிகளான ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தான். உலகில் வாழும் சமப்பாதி மக்கள் இந்த மொழிகளை தான் பேசி வருகிறார்கள். இந்த மொழிகள் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பாக கிழகத்திய ஐரோப்பிய நாடுகளிலும் , மேற்கத்திய ஆசிய நாடுகளிலும் வாழ்ந்த காட்டுவாசிகளிடமிருந்து வளர்ந்ததாக ஆய்வுகள் கூறுகிறது.




உலகில் தோன்றிய அனைத்து மொழிகளும் உலக முதல் மொழியிலிருந்து உருவெடுத்ததே ஆகும். இன்று 5000க்கும் மேற்ப்பட்ட மொழிகள் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.இவை அனைத்தும் சுமார் 20 மொழிகளிலிருந்து வளர்ந்தது.

ஒரு மொழி உலகம் முழுவதும் வளர்ந்ததுக்கான காரணிகளாக இருப்பது,

- வர்த்தகத்தின் போது

- மதத்தின் மூலமாக

- அரசாங்கத்தின் மூலமாக

- ஒரு துறையின் மூலமாக

ஒரு நகரத்தில் அல்லது ஒரு நாட்டில் இருந்து மற்றவர்களிடம் பேசும் போது தாய் மொழியிலல்லாமல், இருவருக்கும் பொதுவான மொழி பேசுவது மரபு. இதையே லிங்குவா பிரான்க(lingua franca) என்றழைக்கிறார்கள்.

கப்பல் துறையில், விமான துறையில் போன்ற பொது வேலைகளில் இருப்பவர்கள் , இது போன்ற பொது மொழி மூலமே வெவ்வேறு வகையான மக்களிடம் பேசினார்கள். இந்த 21-ஆம் நூற்றாண்டில் அப்படியான பொது மொழியாக பரவி வருவது ஆங்கிலமே. இது நிலையானது என்று கூற முடியாது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, ஆனால் அவர்களுடைய மொழி கூட நாளடைவில் போது மொழியாக மாற வாய்ப்புண்டு(அது கடினமே.....!). ஏனெனில் வர்த்தகம், கணினி போன்ற அனைத்து துறையிலும் காட்டுத்தீப்போல பரவி வருவது ஆங்கிலமே.

ஒரே மொழி வெவ்வேறு கண்டத்தில் வெவ்வேறு வகையாக பேசப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலம் ஆசியாவில் ஒரு மாதிரியாகவும் , ஐரோப்பாவில் ஒரு மாதிரியாகவும் பேசப்படுகிறது.




ஐரோப்பாவில் இல் எச்பெரன்ட்டோ(Esperanto) என்ற பொது மொழி எல்.எல்.லமெந்ஹொப்(L. L. Zamenhof) என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.பல நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசிகொண்டிருந்தவர்களை, ஒரே மொழியை இதன் மூலம் பேச வைத்தார்.

இந்த விவாதத்தை இதோடு நிறுத்தாமல் , இதன் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் காண்போம். இதன் தொடர்ச்சியான அடுத்த பாகத்தில் இந்தியாவில் ஆங்கிலம் புகுந்து ஆட்சி செய்வதை காண்போம்.

Tuesday, September 22, 2009

திருமணம் : ஒரு தடைக்கல்லா...?

திருமணம் = இவ்வுலகில் வாழும் அனைத்து தர மக்களும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு நிலை.

ஆதி மனிதன் திருமணம் செய்து கொண்டதாக சேதிகள் இல்லை. மிருங்கங்கள் போல் வரையறையற்று வாழ்ந்து வந்த மனிதனுக்கு, இவன் இவளை இப்படிதான் உறவு கொள்ள வேண்டும் என்று வரையறை போட்டு தந்தது திருமணமே.மனிதனின் ஒருவகை முன்னேற்றமே திருமணம்..!

பண்டைய கால மன்னர்களும் முறையான வாரிசு வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

அரசன் முதல் ஆண்டி வரை அனைத்து தர மக்களும் திருமணத்தை ஒரு கடமையாக செய்கிறார்கள்.

சமிபத்தில் என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும் போது, என்னுடைய நண்பர் ஒருவரை பேருந்தில் சந்தித்தேன். இருவரும் நலம் விசாரித்து கொண்டோம். அவன் தன் மாமியார் வீட்டிற்க்கு போவதாக கூறினான்.உதவி என்று யாரேனும் வந்தால் உடனே உதவி செய்யும் எண்ணம் உள்ளவன்.

அவன் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்.சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். அவனுடைய எண்ணமே அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், இலவச பள்ளிகள் நிறுவ வேண்டும், ஏனெனில் கல்வி தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்று கூறுவான்.

கல்லூரியில் படிக்கும் போது எப்போதும் இதே சமுதாய சிந்தனையுடனே என்னுடன் பேசி கொண்டிருப்பார். இன்று அவனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது....! அந்த சந்திப்பில் நாங்கள் இருவரும் வெகு நேரம் பேசி கொண்டிருந்தோம். அவன் தன குடும்பத்தைப்பற்றியே அதிகமாக பேசி கொண்டிருந்தான்.

தற்செயலாக அவனிடம் சமுதாயத்தைப்பற்றி பேசியதற்கு, என் குடும்பத்தை கவனிக்கவே நேரம் சரியாக இருப்பதால், என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றான்... சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான்.பிறகு அவனுடைய நிறுத்தம் வந்ததால் எறங்கி கொண்டான்...

என்னுடைய அலுவலகம் வர இன்னும் 4 நிறுத்தம் இருந்தது, இடைப்பட்ட அந்த 4 நிறுத்தத்தில் நான் யோசித்த 4 விடயங்கள், இதோ உங்கள் பார்வைக்கு,

- எதனால் இவன் இப்படீ மாறிவிட்டான்...?

- ஒருவேளை இவன் திருமணம் செய்யாமல் இருந்தால், அவனுடைய கனவான கல்வி கூடத்தை நிறுவி இருப்பானோ...?

- இப்போது அவன் திருமணம் செய்து கொண்டதால் அவனுடைய அந்த ஒரு குடும்பம் மட்டுமே பயன் பெற்றிருக்கிறது, ஒருவேளை அவன் இலவச கல்வி கூடத்தை நிறுவி இருந்தால் எதனை குடும்பங்கள் பயன் பெற்றிருக்கும்....?

- திருமணம் ஒரு மனிதனை இப்படியெல்லாம் கூட மாற்றுமா....?

அந்த காலத்தில் வீட்டை காக்க ஒருவனும் , நாட்டை காக்க ஒருவனுமாக தங்களது வாரிசை பெற்றார்கள். அந்த முறை இப்பொழுது ஏன் இல்லை...? அந்நியர்களிடம் அடிமைப்பட்டு கொண்டிருந்த நமது தேசத்தை இவ்வாறாகத்தான் காப்பாற்றினார்கள். அந்த முறை இன்று வந்தால் அந்நியர்களாக வாழ்ந்து கொண்டிக்கும் தேச துரோகிகளிடமிருந்து நமது நாட்டை காப்பாற்றலாம்.இதை ஒருவனுக்கு திணிப்பதை விட, தானாக முன் வர வேண்டும்.

சற்றே சிந்தித்து பார்த்தால் திருமணம் செய்வதால் ஏற்படும் ஒரே நன்மை, கடைசி காலத்தில் தன்னை காப்பாற்ற ஒருவன் தேவை என்பதே, வேறந்த பலனும் இல்லை. இது அனைவருக்கும் அடக்கும்.
இது அசைக்க முடியாத உண்மை...!

தான் மட்டும் இல்லாமல் இச்சமூகமும் நல்ல வழியில் வாழ உதவுபவனுக்கு கடைசி காலத்தில் இந்த உலகமே பின்னால் இருக்கும்...
இதுவும் அசைக்க முடியாத உண்மை...!

நாடென்ன செய்தது நமக்கு, என்று கேள்விகள் கேட்பது எதற்கு,
நீ என்ன செய்தாய் அதற்கு, என்று நினைத்தால் நன்மை உனக்கு...

இந்த நிலைமை மாறி வீட்டிற்கு ஒருவன் காமராசர், அப்துல்கலாம், மற்றும் அன்னைதெராசாவை போன்ற சமூக சீர்திருதவாதிகளாக மாற வேண்டும் என்பதே என் கனவு...!

கனவு மெய்ப்பட வேண்டும்....!

பின்குறிப்பு : சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும்....!

இந்த கனவில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலோ அல்லது எதிர்ப்பு இருந்தாலோ, உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்.....

Tuesday, September 15, 2009

காதல்

ஒரு உயிர் மற்ற உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளிடம் காட்டும் அன்பையே காதல் என்கிறோம்.

இவ்வுலகத்தில் தோன்றிய முதல் உறவே காதல் தான், ஆனால் அப்படியான முதல் உறவு இன்று முதல் இரவை மட்டுமே குறியாக வைத்து வருகிறது.




பறவைகள்,விலங்குகள் போன்ற ஐந்தறிவு உயிறினங்களுக்கும் காதல் வருவதாக கூறப்படுகிறது, சற்றே சிந்தித்து பார்த்தால் ஐந்தறிவு உயிரினங்கள் அனைத்தும் ஒரு உயிரோடு மட்டுமே உறவாடாது, அப்படியிருக்க ஐந்தறிவு உயிரினங்களுக்கு வருவதாக சொல்லப்படும் உறவு காதலா...?

மிருகத்திடம் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக கூறப்படும் மனிதனும் மிருகங்களாகவே மாறிகொண்டிருக்கிறான்...

இன்றைய கணக்கெடுப்பின்ப்படி , காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 40% மட்டுமே தங்களது வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள், மற்ற அனைவரும் தறிகெட்டு போகிறார்கள். இதை வைத்து காதல் வருவதற்கான காரணங்களைச்சற்று சிந்தித்துப்பார்த்தால்,
காதல் வருவதற்கான அடிப்படை காரணிகளாக கருதப்படுவது,

- அழகு ( 50% )

- பணம் மற்றும் புகழ் ( 40% )

- மனசு ( 10% )

காதல் என்பது ஹார்மோன் மற்றும் க்ரோமோசோம்களின் செயல்பாடே, இது மனசு சார்ந்த உறவல்ல, மாறாக அறிவியலின் கூற்றுப்படி உடல் சார்ந்த உறவே...

இதயத்திற்கும் காதலிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.... இதயம் ஒரு மனிதன் இயங்குவதற்கான கருவியே தவிர , காதலின் வெளிபாடு அல்ல........

சங்க இலக்கியம் தொட்டு , இக்கால சினிமா வரை அனைத்து காதலும் நிழலே நிஜமல்ல...

அக்கால அரசர்களும், அரசிகளும் மற்றும் பாமர மக்களும் இலக்கியம் மற்றும் மேடை நாடகங்களில் வாயிலாக காதல் செய்தார்கள்.இக்கால மக்கள் சினிமா, நாடகம் போன்ற ஊடங்கங்களில் வாயிலாக காதல் செய்கிறார்கள்.

சினிமா போன்ற ஊடகத்தின் வாயிலாக காதல் காட்டுத்தீப்போல பரவுகிறது....

ஊடங்கங்களும் இந்த நிழல் வடிவ காதலை ஊக்குவித்து கொண்டுதான் இருக்கிறது...

அந்த நிழலை நிஜம் என்று சில பைத்தியகாரர்கள் காதல் செய்து கொண்டிருக்கிறார்கள்....

சினிமாவில் வரும் நடிகர்களை போல ஆண்களும், நடிகைகளை போல பெண்களும் நினைத்து கொண்டு செய்யும் சேட்டைகள் அன்றாடம் நீங்கள் பார்க்கலாம், இது போல் வரும் காதல் மக்களாகிய நீங்கள் கூறுவது போல் மனசு பார்த்து வருவதா????

அம்பானியின் மகன் பிச்சைக்காரியை காதலிப்பானா??? இல்லை, பிச்சைக்காரி பில்கேட்ஸின் மகனை காதலிப்பானா???.., எதனால் இவர்கள் காதலிக்க மாட்டார்கள் "பணமா இல்லை அழகா இல்லை புகழா ".....?

வயது செய்யும் சிறு கோளாறால் ஆணும் பெண்ணும் பாலின வயதில் செய்யும் உறவே காதல், அது நாளடைவில் திருமணமாக உருவெடுக்கிறது, இத்திருமணம் காதலித்த அவ்விருவருமிடமோ அல்லது வேறொருவரிடமோ முடிகிறது.

ஒருவேளை அந்த திருமணம் நடந்தால் அதற்கான காரணங்கள்

- பெற்றோர் சம்மதத்துடன் நடப்பது

- வீட்டை விட்டு ஓடி போவது

ஒருவேளை அந்த திருமணம் வேறொருவரிடம் நடந்தால் அதற்கான காரணங்கள்

- பெற்றோரிடம் இருந்து வரும் எதிர்ப்பு

- காதல் செய்த அவ்விருவருகளுக்கிடையே வரும் ஊடல்

காதலினால் திருமனத்திற்கு முன்பு ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள், அப்படியானால் விவாகரத்து, தற்கொலை போன்றவைகள் காதலித்தவர்கள் ஊடல் காரணமாக செய்து கொள்வதில்லையா...?

காதலிக்கும் போது இருக்கும் சுகம் வேறெதுவிலும் கிடைக்காது என்பார்கள், அது ஏன் திருமணத்திற்கு பிறகு போகிறது....?

காதலில் தோற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களா..?ஆம்..!

ஆதாமூம் ஏவாளூம் இந்த மண்ணில் படைக்கப்பட்ட காலந்தொட்டே, ஆண்கள் தான் காதலில் தோற்று வருகிறார்கள்.

காதல் கொண்ட மோகத்தால் ஆண்களே ஆப்பிளிலிருந்து, காய்ந்து போன ரோசாப்பு வரை பறித்து கொடுக்கிறான், ஆண்களே சற்று விழித்து கொள்ளுங்கள்.....!

இதையெல்லாம் வைத்து கொண்டு பார்க்கும் போது ஆணிடமும் பெண்ணிடமும் வரும் காதல், ஒரு வகையான ஈர்ப்பே....!

சாதி,மத பேதமற்றது காதல் ==> எவனோ ஒருவன் கூறியது ,
அழகு,பணம்,புகழை தேடி வருவது காதல் ==> உங்களில் ஒருவன் கூறுவது...

இந்த பதிவில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலோ அல்லது எதிர்ப்பு இருந்தாலோ, உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்.....

Saturday, September 12, 2009

யார் அந்த ஆதி மனிதன்.....?

மனிதன் இந்த மண்ணில் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?




குரங்கில் இருந்து தான் மனிதன் வளர்ந்தான் என்று அறிவியல் சொல்லுகிறது. அப்படி இருக்க ஆதாம் தான் இந்த உலகத்தின் முதல் மனிதன் என்று வேதங்களும் கூறுகிறது, அப்படியானால் ஆதாம் மனிதனா அல்லது குரங்கா?

ஆதாம் மண்ணிலிருந்து படைக்க பட்டதாகவும், ஏவாள் அவன் உடலிலிருந்து படைக்க பட்டதாகவும் அறிவியலும், வேதங்களும் கூறுகிறது.

ஆதாமூம் ஏவாளூம் பேசிய முதல் வார்த்தை என்ன? அது எந்த ,மொழியில் இருந்துருக்க கூடும்?

இவ்விருவரும் எந்த நாட்டில் படைக்க பட்டார்கள் ?

அவர்கள் எந்த மதத்தை , எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்?

ஆதாமூம் ஏவாளூம் தான் நமக்கு முன்னவர்கள் என்றால் , இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் சகோதர சகோதரிகள், அப்படி இருக்க மற்ற உறவுகள் எங்கிருந்து யாரால் படைக்க பட்டது?

ஒரு தாய் மக்களான நம்மிடம் நல்லவன், கெட்டவன், உயர்ந்த்வன், தாழ்ந்தவன், பணம், பொய், திருட்டு, சண்டை, அடிமைத்தனம் போன்றவை எங்கிருந்து யாரால் வந்தது?

விலங்கினங்கள் எங்கிருந்து யாரால் படைக்க பட்டது?

மண்ணுலகம், விண்ணுலகம்(சொர்க்கம் , நரகம்) போன்ற இரு வேறு உலகம் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதனுக்கும் விலங்கினத்துக்கும் மரணம் என்ற ஒரு நிலை வருகிறது. மரணம் தான் உயிரினத்திற்கு இறுதி நிலை என்றால் உயிரினங்கள் எதற்காக மண்ணில் படைக்க பெற்றார்கள்?

பின்வருவன அனைத்தும் மனிதன் இம்மண்ணுலகில் செய்யும் பாரம்பரிய நடவடிக்கைகள்,

- பிறப்பது

- வளர்வது

- இறப்பது

வாழ்வதற்கு உயிரினங்கள் என்றால், எதற்கு மரணம்? இதற்க்குத்தான் இவர்கள் மண்ணில் படைக்க பெற்றார்களா ?

இதை இதற்கு முன்னால் சிந்தித்து பார்த்ததுண்டா, பார்த்திருந்தால் மகிழ்ச்சி, இல்லையெனில் சற்று ஆழ்ந்து சிந்தித்து விட்டு உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்...
 

இன்று முதல்,




நான் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல விரும்புகிறேன்......!
                                                                                                        - ஊடகன்